Thursday, May 29, 2008

வருக! வருக!!

நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.

கடந்த 25-05-2008 சென்னையில் இனிது நடந்த நமது சந்திப்பு, இன்றும்-என்றும் நம் நெஞ்சில் நினைவாடும். அன்று பெரிய முகூர்த்த நாளாக அமைந்துவிட்ட காரணத்தினால், நாம் எண்ணிக்கையில் குறைவாகக் கூடியிருந்தாலும், எண்ணத்தால் நிறைவாகக் கலந்திருந்தோம்.

36 வருடங்கள் பின்னோக்கிப் பறந்து, உள்ளும் புறமும் பசுமை நிறைந்த அந்த இனிய நாட்களை; இன்றும் இனிக்கும், என்றும் நிலைக்கும் இளமைக் குறும்புகளை, அழகாகவும், ஆழமாகவும் நினைவு கொண்டோம். பெரிய பெரிய பதவிகளை அடைந்துவிட்ட நிலையிலும், அன்று நமது பதவி, பொறுப்பு, பணம், வயது எனும் அனைத்து முகமூடிகளையும் துறந்து, 'நான்' எனும் அழுக்கினைக் களைந்து, 'நாம்' எனும் முழுமையில் நிறைந்திருந்தோம். உங்களையெல்லாம் வெகுகாலமாகப் பிரிந்து கடல் கடந்து 'வாழும்' என் மனம், அன்று அடைந்த நிம்மதியின் அளவை நான் மட்டுமே அறிவேன். அந்த தெய்வீக நிமிடங்களை எனக்குத் தந்த அனைவருக்கும் என் நன்றி; எங்கும் எதிலும் நிறைந்த பரம்பொருளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

இனி வரும் ஆண்டுகளில், அனைவரையும் தொடர்புகொண்டு, எல்லோரும் கலந்துகொண்டு இன்பத்தைப் பெருக்கிக்கொள்ள வரம் அருளுமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

-ஹ.ர.ஜாபர் அலி